புதுடெல்லி,
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவரை மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் மல்த்ரா நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு பாலம் விமானப்படை தளத்தில் பாரம்பரிய முறைப்படி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
பராகுவே அதிபரை வரவேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
“உங்கள் வருகை உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்கது. நீங்கள் டெல்லிக்கு மட்டுமல்ல, மும்பைக்கும் வருகை தருகிறீர்கள். இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம், பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் செழுமைக்கான பாதையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டுள்ளன. கொரோனா காலகட்டத்தின்போது இந்தியா தனது தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பராகுவேக்கு ஆதரவை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் வருகை எங்கள் உறவுகளில் நம்பிக்கை, வர்த்தகம் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் தூண்களுக்கு புதிய பலத்தை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து சாண்டியாகோ பெனா பலாசியோஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அன்பான வரவேற்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன், பராகுவே உலகிற்கு வழங்க வேண்டிய அனைத்தையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டேன். சுத்தமான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வளமான நிலம், வளர்ச்சி ஆகியவை தொடர்பாக நாங்கள் ஆலோசித்தோம். தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் போன்ற முக்கிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை நாங்கள் விவாதித்தோம். எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பராகுவே தயாராக உள்ளது என அதில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்தப்பின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார். இதைத் தொடர்ந்து,பராகுவே அதிபர் பலாசியோஸ் மும்பை செல்ல உள்ளார். அங்கு, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை சந்தித்து பேச உள்ளார்.