டெல்லி மெஹ்ரெளவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், டெல்லி பல்கலைக்கழக திறந்த வெளி பள்ளியில் பி.காம் படித்து வந்தார். அவருக்கும் அர்ஷ்கிரித் சிங் (18) என்பவருக்கும் பார்ட்டி ஒன்றில் தொடர்பு ஏற்பட்டது.
சிங்கும் பி.காம் படித்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். மாணவி கிளாஸ் செல்வதாகத் தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
கிளாஸிலிருந்து தனது தாயாருக்கு போன் செய்து தான் விரைவில் வந்துவிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அச்சம் அடைந்தனர்.
மாணவியின் தாயாருக்கு சிங்கின் தந்தை போன் செய்து தனது மகன் தாக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

உடனே மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று சிங்கிடம் தங்களது மகள் எங்கே என்று கேட்டனர். அதற்கு உங்களது மகள் என்னைக் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்தார்.
இதனால் மாணவியைப் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஏற்கனவே மாணவியை சிங் துன்புறுத்தி வந்தார். எனவே மாணவியின் பெற்றோர் கடத்தல் புகார் பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் சிங்கிடம் விசாரித்தபோது மாணவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அங்கிட் செளதரி கூறுகையில், ”மாணவியை சிங் தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார். அதோடு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மாணவியைக் கத்தியால் குத்தியபோது சிங்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தான் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவி மற்ற வாலிபர்களுடன் பேசியது சிங்கிற்குப் பிடிக்கவில்லை.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு இக்கொலையைச் செய்துள்ளார்” என்றார்.

இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், ”இருவரும் பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் நண்பர்களாகியுள்ளனர். வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று எனது மகளிடம் சிங் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனால் எனது மகள் 6 மாதத்திற்கு முன்பு சிங்குடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
இருவரிடமும் மீண்டும் சந்தித்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லி இருந்தோம். அப்படி இருந்தும் அடிக்கடி சிங் எங்களது வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்வான்.
இது குறித்து அவனது பெற்றோரிடமும் தெரிவித்தோம். அவர்கள் மன்னிப்பும் கேட்டனர். அப்படி இருந்தும் துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது” என்று தெரிவித்தார்.