கடலூர்: மே மாத ஊதியத்தை இதுவரை வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாள் அன்று சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன் 4) வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இன்று (ஜூன் 4) காலை 11.30 மணி அளவில் பல்கலைக்கழக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்க நிர்வாகிகள் மனோகர், ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழக அரசையும், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருள்செல்வியை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.