புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரம் எனக் கூறி ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தூதுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக பாகிஸ்தான் எழுப்பிய கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது.
மத அடையாளத்தைப் பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான், சஞ்சய் குமார் ஜா தலைமையிலான இந்தியக் குழுவின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யுமாறு மலேசிய அரசு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து, “நாங்களும் இஸ்லாமிய நாடு, நீங்களும் இஸ்லாமிய நாடு, மலேசியாவில் இந்திய தூதுக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விடுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த மலேசிய அரசு, 9 பேர் அடங்கிய இந்திய தூதுக்குழுவுக்கு 10 முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், பாஜக எம்.பி.கள் அபராஜித சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பருஹா, ஹேமங் ஜோஷி, திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, சிபிஎம்-ன் ஜான் பிரிட்டாஸ், காங்கிரஸ் கட்சியின் சல்மான் குர்ஷித், பஹ்ரைன் மற்றும் பிரான்ஸுக்கான முன்னாள் தூதர் மோகன் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு பயணித்த குழுவினுடைய பயணத்தின் கடைசி நாடாக மலேசியா இடம்பெற்றிருந்தது. தூதுக்குழுவினர் சனிக்கிழமை கோலாலம்பூர் சென்று சேர்ந்தனர்.
இந்தியத் தூதுக்குழு, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதிர் மொகமதுவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒய்.பி.சிம் க டிஸ் டிஷின் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சியைச் சந்தித்து, பயங்கரவாத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியாவின் உறுதியான அணுகுமுறையையும் எடுத்துரைத்தனர்.
இதனிடையே, கோலாலம்பூரில் உள்ள இந்தியர்களிடம் உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி, “பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீரை திரும்ப ஒப்படைத்தால் மட்டுமே, இந்தியா அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும்” என்று தெரிவித்தார்.
ஐந்து நாடுகளுக்கான பயணத்தை முடித்துவிட்டு, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு புதன்கிழமை நாடு திரும்பியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குழுவினை வழிநடத்திய சஞ்சய் ஜா, “அனைத்து நாடுகளும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர். பயங்கரவாத கட்டமைப்புக்கு எதிரான இந்தியாவின் துல்லியத் தாக்குதலைப் பாராட்டின” என்று தெரிவித்தார்.