தேசிய மேம்பாட்டுக்காக ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்: பாகிஸ்தான் நிதி அமைப்பு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடையும் வகையில், ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு தேசிய பொருளாதா கவுன்சில் ஒருமனதாக தனது ஒப்புதலை தெரிவித்தது.

மேலும், நடப்பு ஜுன் மாதத்துடன் முடிவடையும் 2024-25-ம் நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

என்சிசி கூட்டத்தில் பிரதமர் ஷொபாஸ் பேசுகையில், “ சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தண்ணீருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை மிரட்டி பணியவைக்கும் இந்தியாவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் வேளாண் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, வேளாண் துறை உற்பத்தியை அதிகரிக்க தேவையான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.