“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், “காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்ததற்கும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு இங்கிலாந்து அளித்த ஆதரவுக்கும் நன்றி.

பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். மேலும், எங்கள் நட்பு நாடுகள் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தீமை செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக நிறுத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு ஆகியவை உண்மையிலேயே ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினையை இந்தியத் தரப்பு எழுப்பியதாகத் தெரிகிறது.

கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின்போது பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியில் இரு நாடுகளுடனும் தொடர்பில் இருந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இரண்டு நாள் பயணமாக மே 16-ம் தேதி இஸ்லாமாபாத் சென்ற இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே 10 அன்று ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.