வைகை அணை பராமரிப்பில் தொடர்ந்து மெத்தன நிலை நிலவி வருவதால் அணையின் கட்டுமான பகுதிகள், மின் இணைப்புகள் ஏராளமான இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. நீர்வளத் துறை அதிகாரிகள் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பிரதான பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுமார் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதியில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, வைகைப்புதூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வரை அணை நீர் தேங்கி நிற்கும்.
தண்ணீர் குறைவாக இருக்கும்போது இந்த நீர்தேக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து பலரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீர்வளத் துறை அதிகாரிகள் இதனை கண்காணிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ கிடையாது. இதனால் வைகைஅணையின் உள்பகுதி விவசாயப் பகுதிகளாக மாறி வருகிறது.
பல ஆண்டுகளாகவே அணை பராமரிப்பிலும் நீர்வளத் துறை மெத்தனம் காட்டி வருகிறது. வட, இடது கரை பூங்காக்களை இணைக்கும் தரைப் பாலம் நீர் அதிகம் வெளியேறும் காலங்களில் மூழ்கிவிடுகிறது. இதனை உயர்த்தி அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது. சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய ரயில் பராமரிப்பின்றி பழுதாகியே கிடக்கிறது. இதேபோல் படகு குழாமில் உள்ள 3 படகுகள் பழுதாகி இயக்கப்படாமலேயே உள்ளது.
அணையின் முக்கிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. குறிப்பாக பிரதான மதகுகள், நீர்மட்ட அளவை கண்காணிக்கும் அறை உள்ளிட்ட முக்கிய இடங்களில்கூட இந்த கேமராக்கள் பழுதாகி கிடக்கின்றன. அணையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அணையின் வடபகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை, கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட பகுதிகள்அனைத்தும் சேதமடைந்து, புதர்மண்டிக் காணப்படுகிறது.
அணையின் நீர்தேக்கப் பகுதிக்குள் அத்துமீறிச் செல்லும் பலரும் அங்கு குளிக்கின்றனர். இதனால் சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆனால் இதனை கண்காணிக்க எந்த ஊழியரும் இல்லை. அணையின் பல பகுதிகளிலும் உள்ள மின் பெட்டிகள் கருகி திறந்தநிலையிலேயே கிடக்கின்றன. மின்மாற்றி பழுதாகி விட்டதால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் வண்ண மற்றும் சர மின்விளக்குகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அணையின் தண்ணீருக்காக போட்டிபோடும் பல்வேறு விவசாய அமைப்புகளும் அணையின் அவலநிலையை ஏனோ கண்டுகொள்வதில்லை என்று அணையை ஆர்வமுடன் காண வந்து அதிர்ச்சியடையும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஊழியர்கள் நியமனம் இல்லாததால் அணையை முழுதாக பராமரிக்க முடிவதில்லை. தற்போது பணிபுரிபவர்களும் தற்காலிக ஊழியர்களாகவே உள்ளனர். மின் இணைப்புகள் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணை சீரமைப்புக்கும் உரிய நிதி ஒதுக்குவதில்லை. இதனால் அணை பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது, என்றனர்.