வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சிதறி ஓடினர். சில மணித்துளிகள் களேபரத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பள்ளியில் உள்ள கழிவறைகளில் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு கிராஸ் நகர மேயர் எல்கே கார் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு மோசமான துயரம் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். போலீஸ் தரப்பில், “சம்பவப் பகுதி முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பள்ளியில் இருந்து அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டோம். உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்த பகுதியில் மேலும் அபாயகரமான சூழல் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு ஜூன் 20-ல், கிராஸ் நகரில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அதன் 10-வது ஆண்டு நினைவு நாள் வரவிருக்கும் நிலையில், கிராஸ் நகரில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி, இரவு 12.15 மணியளவில் கிராஸ் நகரின் மையப் பகுதியில் ஆலன் ரிஸ்வானிக் என்ற 26 வயது இளைஞர் தனது காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 43 பேர் காயமடைந்தனர். மேலும் காரில் இருந்து இறங்கிவந்து பாதசாரிகள் இருவர், சைக்கிளில் சென்ற ஒருவர் என மூன்று பேரை கத்தியால் குத்திக் கொன்றார். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான பின்னர் அவர் போலீஸிடம், “நான் துருக்கியர்களால் துன்புறுத்தப்பட்டதாக உணர்கிறேன்” என்று மட்டும் கூறியிருந்தார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மதவாத, இனவாத வெறுப்பு, சித்தாந்தங்கள் ஏதுமில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர், போஸ்னியா போரில் இருந்து தப்பித்து அகதியாக ஆஸ்திரியா வந்தவர். 2023 செப்டம்பரில் அவர் சிறையில் இருந்தபோது உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.