சிவகங்கை: “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்,” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் பிறந்ததினத்தை யொட்டி, இன்று (ஜூன் 10) அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் பாஜக முக்கியமான கட்சி. தமிழகத்தில் ஜெயலலிதா கட்சி தலைமையில் தான் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதாக அமித் ஷா கூறியுள்ளார். அதன்படி, கூட்டணி அமைந்துள்ளது.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். பாஜக கூட்டணியை பலப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். வருகிற தேர்தலில் நாங்கள் திமுகவை வீழ்த்தப் போகிறோம் என்ற பயத்தில் முதல்வர் உட்பட அக்கட்சியில் அனைவரும் ஏதேதோ பேசி வருகின்றனர்.
மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மக்கள் விரும்பும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்,” என்று அவர் கூறினார்.