சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அளவில் முதல்வர், டிஜிபி அடங்கிய குழுவும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கொண்ட குழுவும் உள்ளன. மாவட்டக் குழு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரித்து, மாநில குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு நடைபெறுவதாக தெரியவில்லை.

தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் டிஜிபி தலைமையிலான எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்படுவதையும், பட்டியல் சமூகத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும், சாதி வெறுப்புணர்வை தூண்டும் யூ டியூப் சேனல்களுக்கு தடை விதித்தும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத, தேர்தல்களில் போட்டியிடாத சாதி கட்சிகள் மற்றும் தமிழகத்தில் கூட்டுறவு சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து சாதி சங்கங்களுக்கும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக ஆதி திராவிட நலத்துறை செயலர், தமிழக டிஜிபி, பதிவுத் துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.