“பணம் ஓர் உயிரை திரும்பத் தராது” – அகமதாபாத் விபத்தில் தந்தையை இழந்த மகள் கண்ணீர்!

அகம​தா​பாத்: “ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு என் தந்தையை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. பணம் ஓர் உயிரை திரும்பக் கொடுக்கப் போவதில்லை.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கமாகப் பேசியுள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து பல குடும்​பங்​களின் கனவு​களை கலைந்து சுக்குநூறாக்கிய நிலையில், தனது தந்தையை இழந்த மகள் பகிர்ந்த வீடியோ கண்களை கனக்கச் செய்கிறது.

அகமதாபாத் விமான விபத்து, பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ், தனது மகளை காணச் சென்ற குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்தவர் என பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது . விமானத்தில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டினர், கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 போர்த்துகீசியர்கள் இருந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் 241 பேர் பலியான நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரமேஷ் சந்த் படேல் என்பவர் உயிரிழந்திருக்கிறார். குஜராத்திற்கு அடிக்கடி வருகை தரும் படேல், தனது பூர்வீக நாட்டோடு ஆழமான தொடர்பைக் கொண்டவராக அறியப்படுகிறார். தனது தந்தையை இழந்த துக்கத்தில், மகள் பிரிதி பாண்ட்யா தனது தந்தை குறித்து பேசிய வீடியோ காண்போரை கண்கலங்கச் செய்கிறது. அதில், “எனது தந்தை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருவார்.

அவர் இந்தியாவை மிகவும் நேசித்தார். இந்த முறை எனது தந்தை வெறும் 9 நாட்கள் மட்டும் இந்தியாவில் தங்குவதற்காக வந்தார். ஜம்புரா பழத்தை சாப்பிடுவதற்காகவே அவர் இங்கு வர விரும்புவார். ஆனால் இந்த முறை அவர் வீட்டுக்கு வரவில்லை.

செவ்வாய்க்கிழமை அவர் எனக்கு வீடியோ கால் செய்தார். நான் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். அதனால் அவரின் அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. இதுதான் அவரின் கடைசி அழைப்பு என்பது எனக்கு தெரியவில்லை. அவர் இந்தியாவுக்கு வர விரும்பினார். இந்த நாட்டை நேசித்தார். இங்கேயே இறந்துவிட்டார்.

ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு அவரைத் திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. பணம் ஓர் உயிரை திரும்பக் கொடுக்கப் போவதில்லை” என்று உருக்கமாக பேசினார். ரமேஷ் படேலின் மருமகள் காஜல் படேலும், அவருடனான கடைசி தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.