அகமதாபாத்: விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத்தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவுகான் என்ற இளம்பெண் பயணிக்கவிருந்தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து பூமி சவுகான் கூறுகையில், “போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் 10 நிமிடம் தாமதமாக விமான நிலையம் வந்தேன். பிறகு விமான நிலையத்தை விட்டு புறப்படவிருந்த நேரத்தில் விமான விபத்து பற்றி அறிந்தேன்.
எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எனது கால்கள் நடுங்கத் தொடங்கின. சிறிது நேரம் செயலற்ற நிலையில் இருந்தேன். நான் வணங்கும் கணபதியின் அருளால் உயிர் தப்பினேன்’’ என்றார். பூமி தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விடுமுறையில் இந்தியா வந்திருந்தார்.