‘தக் லைஃப்' தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக‌ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது.

இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த 3-ம் தேதி க‌ர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ”கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு அந்த திரைப்படத்தை திரையிட முடியாது” எனக்கூறி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இதனால் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

இந்த தடையை எதிர்த்து சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தக் லைஃப் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை கன்னட அமைப்பினர் வாய்மொழி அச்சுறுத்தல் மூலம் கர்நாடகாவில் வெளியிட முடியாமல் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துக்களால் அந்த திரைப்படத்துக்கு சட்டரீதியான தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் சட்டத்துக்கு புறம்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது” என‌ குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ”கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தடையானது சட்டத்துக்கு புறம்பானது. இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். கன்னட அமைப்பினர் திரையரங்குகளுக்கு தீ வைப்பதாக விடுத்த மிரட்டலுக்கு கர்நாடக அரசு அடிபணிந்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை மொழி சிறுபான்மை மற்றும் வகுப்புவாத வன்முறை அச்சுறுத்தல்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாக உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளுக்கும் மாநிலத்தின் சட்ட ஒழுங்குக்கும் ஏற்பட்ட தோல்வியாகும்” என வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், தக் லைஃப் திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்காததால் அந்த வழக்கின் விசாரணை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.