வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்துகின்றனர்.
கீழடியைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகின்றன. தமிழுக்கு தொண்டு செய்வதுபோல காட்டிக்கொண்டு, திமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். வரும் தேர்தலில் அது எடுபடாது.
விஜய் அரசியலுக்கு வந்ததால், யாருக்கு லாபம், நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்னர்தான் தெரியும். அதேநேரத்தில், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற விரும்பும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும். எங்கள் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும். அதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒருமித்த கருத்தோடு கூட்டணிக்கு வரவேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார். இவ்வாறு அவர் கூறினார்.