திருவள்ளூர் / மதுராந்தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி மன்னிப்பு கேட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கிடையே, பாமகவின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச் சாவடி குழுக்கள் அமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவை மாநில தலைவர் பாலு, இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி, அமைப்பு செயலாளர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அன்புமணி பேசியதாவது: பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. பாமக சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. சமூகநீதி, சாதிவாரி கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சியை அகற்றும் கவுன்ட்டவுன் இன்றிலிருந்து தொடங்குகிறது. 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும்.
அடுத்தவர்கள் ஆட்சிக்கு வர கட்சியை நடத்தவில்லை. உலக தந்தையர் தினமான இன்று, ராமதாஸ் உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் வாழ்த்துகள். ராமதாஸ் நீண்ட ஆயுளோடு மனநிம்மதியோடு, உடல் நலத்தோடு, மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ராமதாஸ் அவர்களே உங்களுக்கு என்மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள்.
ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். ஏனென்றால், இது நீங்கள் 45 ஆண்டுகள் வளர்த்த கட்சி. உங்கள் கனவுகளை நனவாக்குவோம். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி, உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார். அந்த மதிப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
திருஷ்டி: இதேபோல், மதுராந்தகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, 45 நாட்களில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மாநாடு நடத்தினோம். இதனால் ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல். இதனால், வந்த திருஷ்டியால் தான் இத்தனை பிரச்சினைகளும் நிகழ்ந்தன. போதைப் பொருள் நடமாட்டத்தை முதல்வர் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.