இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இருவரும் ஓய்வை அறிவித்து உள்ளனர். குறிப்பாக விராட் கோலி இன்னும் ஓராண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளதால் இனி ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாட உள்ளனர்.
இந்தியாவின் அடுத்த சில வொயிட் பால் தொடர்கள்
அடுத்த இரண்டு மாதங்கள் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை இந்திய அணியில் பார்க்க முடியாது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது, அதில் ஒரு நாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம் பெறுவார்கள். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் தொடரில் இடம் பெறுவார்கள். அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். ஜனவரி 11, 14 மற்றும் 18 என மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.
மேலும் ஐந்து போட்டியில் கொண்ட டி20 தொடரிலும் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். அதே சமயம் ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து தொடருக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரையும் ஐபிஎல் லில் மட்டும் தான் பார்க்க முடியும். அதனை தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பைத் தொடர் நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐ அதிகமான ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடும் விதத்தில் அட்டவணையை தயார் செய்து வருகிறது.