கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இம்மாநாடு, 17-ந் தேதி வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். முன்னதாக பிரதமர் மோடி, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டு இருந்தார். முதலில் அவர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்தில் அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார்
நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. சைப்ரஸின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கவுரவித்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதுக்காக, சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மரியாதை ஆகும். இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.