ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் பலியானார்.உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 47 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ. சோதனை மூலம் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டது. அதை தொடர்ந்து அவருடைய உடல் உள்ள சவப்பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அங்கு விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்-மந்திரி பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். விஜய் ரூபானியின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, விஜய் ரூபானியின் உடல் அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான ராஜ்கோட்டுக்கு பிற்பகலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாலை ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில் முதல்-மந்திரி பூபேந்திர படேல், மத்திய மந்திரிகள் மற்றும் விஜய் ரூபானியின் உறவினர்கள் பங்கேற்றனர். அதேபோல உள்துறை மந்திரி அமித்ஷாவும் விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.