சென்னை: தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது.
சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-வது நாளே இருவரை போலீஸ் கைது செய்தது. அவர் ஜூன் 11-ம் தேதி இரவு சாலையில் உயிரிழந்து கிடந்த நிலையில், சந்தேக மரணமாக முதலில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
உடற்கூறாய்வில், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந்ததும், கொலை வழக்கு பதிந்து இருவரை போலீஸார் கைது செய்தனர். பாஜக பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசியல் செய்ய எதுவும் கிடைக்காமல், ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா, அதை வைத்து மலின அரசியல் செய்ய முடியாதா எனக் குற்றங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்களே சொல்லும். கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் குற்றங்களைக் குறைத்தது திமுக அரசுதான். துப்பாக்கி கலாச்சாரம் பற்றியெல்லாம் பழனிசாமி பேசலாமா, அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.