அல்பாட்டா: பிரதமர் மோடி… நீங்கள்தான் மிகச்சிறந்தவர் என்று ஜி7 உச்சி மாநாட்டின்போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம் சூட்டினார்.
கனடா நாட்டில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை, மெலோனி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே உள்ள நல்லுறவு, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். இதைத் தொடர்ந்து ஜார்ஜியா மெலோனி சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளப் பதிவில் மெலோனி கூறியுள்ளதாவது: மோடி… நீங்கள்தான் மிகச் சிறந்தவர். நான் உங்களைப் போலவே இருக்கவும் செயல்படவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். மேலும் இருவரும் சந்தித்து கைகுலுக்கும் வீடியோவையும்
அவர் பகிர்ந்தார். இந்நிலையில், இருவரும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து எக்ஸ் வலைதளத்தில் மெலடி என்ற ஹேஷ்டேக் டிரண்டிங்கில் இருந்தது. கடந்த முறை துபாயில் நடைபெற்ற சிஓபி 28 மாநாடு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது மெலோனி பெயரையும், மோடி பெயரையும் இணைந்து மெலடி என்ற பெயரில் சமூக வலைதள வாசிகள் ஹேஷ்டேக்கை உருவாக்கிப் பாராட்டினர்.
மெலோனியின் வலைதளப் பதிவுக்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.