சென்னை: கொள்முதல் விலை உள்ளிட்ட ‘மா’ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் ஜூன் 20-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ‘மா’ விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 லாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
‘மா’உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சா), செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி), காசா, மங்கனப்பள்ளி, கிரேப், மல்கோவா, இமாம்சந்த், காணாப்பாடி, ருமேனியா, சேலம் குண்டு, நாட்டுக்காய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகால நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதும், நெல்லானாலும், கரும்பானாலும், பயிர் வகைகளானாலும், மஞ்சள் ஆனாலும் உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையே அடைந்து வருகின்றனர்.
பயிர்க் காப்பீடு முதல் வறட்சி மற்றும் வெள்ள காலங்களில் உரிய நிவாரணம் அளிப்பது வரை, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த அரசு விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றது. ‘உழவன் கணக்குப் பார்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது’ என்பதையும், ‘விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது’ என்பதையும் மறந்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் ‘விவசாயி’ வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.
தென் மாவட்ட ‘மா’ விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15-ஐ நிர்ணயித்து, விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், தனியார் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-க்கு மேல் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 1 கிலோ மாம்பழத்துக்கு ரூ. 5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள் என்றும், எனவே, ‘மா’ விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தென் மாவட்ட ‘மா’ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுகவின் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில், ஜூன் 20-ம் தேதி, வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், நத்தம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் பொருளாளர், திண்டுக்கல் சீனிவாசன், தலைமையிலும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ‘மா’ விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.