தாக்குதல் தொடர்ந்தால்.. 'இன்னும் பேரழிவு தரும்' பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

டெல்அவிவ்,

ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ந்தேதி முதல் இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், அணு விஞ்ஞானிகள் என அணுசக்தி துறையை குறி வைத்து தாக்கியது.

அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என பிற பகுதிகளையும் தங்கள் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி வருகிறது. இதில் இஸ்ரேலும் பலத்த சேதங்களை சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த ராணுவ மோதல் 2-வது வாரத்தை எட்டி இருக்கிறது. நேற்றும் இரு நாடுகளும் தங்கள் மோதலை எவ்வித குறையும் இன்றி தொடர்ந்தன.

இஸ்ரேல் வான் தாக்குதல்

முக்கியமாக ஈரானின் இஸ்பகானில் உள்ள அணு ஆய்வு மையத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியது. இதை மாகாண பாதுகாப்பு நலன்களுக்கான துணை கவர்னர் அக்பர் சலேயும் உறுதி செய்தார்.

எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை. அதேநேரம் இந்த மையம் பெரும் சேதம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலும் இந்த மையம் இஸ்ரேலால் தாக்கப்பட்டது. அந்தவகையில் மீண்டும் இந்த மையத்தை அந்த நாடு தாக்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத கட்டமைப்புகளைப்போல ஈரானின் ராணுவ தளபதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. அந்தவரிசையில் ஈரானின் 3 முக்கிய தளபதிகளை நேற்று முன்தினமும், நேற்றுமாக கொன்று இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

அதன்படி ஈரானின் துணை ராணுவமான புரட்சிகரப்படையின் முக்கிய தளபதியான சயீத் இஸாதியை கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவ மந்திரி தெரிவித்தார்.

ஈரானின் குத்ஸ் படையின் பாலஸ்தீன பிரிவு கமாண்டரான இவர் கோம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார். இதை ஈரான் அதிகாரிகள் உடனடியாக உறுதி செய்யவில்லை. எனினும் கோம் நகரில் 4 மாடி குடியிருப்பில் தாக்குதல் நடந்ததை கோம் கவர்னர் அலுவலகம் உறுதி செய்தது. மேலும் இதில் 2 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகம் கூறியிருக்கிறது.

மேலும் குத்ஸ் படையின் ஆயுத பரிமாற்றப்பிரிவு தளபதியான பெனாம் ஷரியாரி, மேற்கு ஈரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது தாக்கி கொலை செய்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதைத்தவிர ஈரானின் டிரோன் படைப்பிரிவின் கமாண்டர் ஒருவரையும் நேற்று முன்தினம் இரவில் கொலை செய்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த 13-ந்தேதி நடந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலரும் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மேலும் 3 தளபதிகளை இஸ்ரேல் தாக்கி கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் பதிலடி

இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலுக்கு நேற்றும் ஈரான் கடுமையான பதிலடி கொடுத்தது. நேற்றும் அலையலையாக இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதில் சேதம் விளைந்தது குறித்த தகவல் இல்லை.

ஈரானின் இந்த புதிய தாக்குதல் சிறிய அளவிலானது என இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதே நேரம் சில டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இஸ்ரேலின் அடுக்குமாடி கட்டிடங்களை பதம் பார்த்துள்ளன. எனினும் உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்படவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் ராணுவ மோதலில் ஈரானில் 660-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மறுபுறம் இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான்-இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் அவசரமாக கூடியது. இதில் ஈரானின் அணு உலைகள் குறிப்பாக அந்த நாட்டின் ஒரே வர்த்தக அணு உலையான புஷேர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முயற்சி தொடர்பாக கடும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தாக்குதல் தொடர்ந்தால் ‘இன்னும் பேரழிவு தரும்’ பதிலடி கொடுக்கப்படும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “எங்கள் அமைதியான அணுசக்தி திட்டம் குறித்து நம்பிக்கையை வளர்க்க மற்றவர்களுடன் பேசவும் பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் அணுசக்தி நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இஸ்ரேல் எங்களைத் தொடர்ந்து தாக்கினால், எங்கள் பதில் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.