ஐதராபாத்,
ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யா மாவட்டம் அச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. தலித் வகுப்பை சேர்ந்தவரான இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த அவர் தாயின் அரவணைப்பில் உள்ளார். இந்தநிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமியை அவருடைய தாய் அனுமதித்தார். அப்போது டாக்டர்கள் பரிசோதனையில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனால் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தொிந்தது.
அதாவது அந்த சிறுமி பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள வயலில் பேசிக் கொண்டிருந்தனர். அங்கே அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர் வந்து அந்த மாணவனை அடித்து துரத்திவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும் வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டி அந்த வீடியோவை காட்டி அந்த சிறுமியை சுமார் 15 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். 2 ஆண்டுகளாக தொடா்ந்துள்ளது. இதனால் கர்ப்பமானதை தொடர்ந்து இந்த அவலம் வெளியே தெரிந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது முதல் 51 வயது உடைய 13 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைந்தனர். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில், ‘மாவட்ட நிர்வாகம் சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது’, அவளுடைய மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வதாகவும், குணமடையும் போது உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.