பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம்

புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு குழுக்களை அமைத்தது. அவற்றில் சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சசி தரூர் தலைமையிலான குழு கடந்த மாதம் சென்றது. அந்நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகளை சந்தித்து பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எடுத்துரைத்து வெற்றிகரமாக நாடு திரும்பினார் சசி தரூர்.

இந்நிலையில், ‘இந்து’ ஆங்கில நாளிதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் உலக நாடுகள் உடனான உறவை மேம்படுத்த வேண்டும் என்ற அவரது ஆர்வம் போன்றவற்றுக்கு கூடுதலாக ஆதரவு வழங்க வேண்டும். சர்வதேச அளவில் பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறார். இந்தியா ஒன்றுபட்டால், உலக நாடுகள் மத்தியில் நமது நாட்டின் குரலை மிக தெளிவாக, உறுதியாக வெளிப்படுத்த முடியும் என்பதை இது உறுதிப்படுத்தி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து வெளிநாட்டு தலைவர்களிடம் விரிவாக விளக்கினோம். தீவிரவாதத்துடன் பாகிஸ்தான் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளதை எடுத்துரைத்தோம்.

நாங்கள் அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் இருந்தும் ஒரு குழுவினர் வந்திருந்தனர். எனினும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து நாங்கள் எடுத்துரைத்த கவலைகளை அமெரிக்க பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர். தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். நமது எல்லைகளுக்கு அப்பால் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலின் தீவிரம், தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்று தருவது, அதற்கு உலக அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதே எங்கள் பயணத்தின் நோக்கம்.இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசி தரூர். இவர் தொடர்ந்து பிரதமர் மோடியை பாராட்டி வருவதால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்து சசி தரூர் கூறும்போது, ‘‘கடந்த 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கொள்கைக்கும் விசுவாசமாக இருக்கிறேன். கட்சி மாற மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.