`முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட வழிகாட்டிகளை இழிவுபடுத்தியது கண்டனத்துக்குரியது'- டிடிவி தினகரன்

சேலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து மக்கள் முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அன்றைய தினம் வேலை இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. தந்தை பெரியார், அண்ணா மற்றும் திராவிடத்தை பற்றி விமர்சித்து காணொளியை காண்பித்ததை தவிர்த்து இருக்கவேண்டும். பாஜக-வுடன் அமமுக, அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் இருக்கும்போது, அண்ணாவை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட பாதையில் பயணித்து வரும் நிலையில், இதை தவிர்த்து இருக்க வேண்டும். இந்த நிகழ்வு வருத்தம் அளிக்கிறது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் சபையின் நாகரிகம் கருதி, அமைதியாக இருந்துவிட்டு வெளியே வந்து விட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழைத்துவிட்டு, இது போன்ற காணொளியை காண்பித்தது கண்டனத்திற்குரியது.

அமித் ஷாவை சந்திக்க அமமுக விருப்பப்பட்டால் அவரை சந்திப்போம். அவர் சந்திக்க விருப்பப்பட்டாலும் சந்திப்போம். சந்திக்கவில்லை என்று கேட்டால் மாற்றம் வரப்போவதில்லை. மோடி பிரதமராக வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதால் பாஜக-வுடன் கூட்டணி. மேலும் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக கூட்டணியில் இருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மத்தியில் உள்ள அமைச்சரையோ, நிர்வாகிகளையோ சந்திக்க தேவை இருந்தால் சந்திப்பேன்; அவர்களுக்கு தேவை இருந்தாலும் சந்திப்போம்” என்றார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், தேர்தல் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுமோ என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ளது. அந்த நேரத்தில் தெரியும்.

டிடிவி தினகரன்

எந்த ஒரு மதத்தையும் சீண்டி, எந்த ஒரு அரசியல் கட்சியும், தனி நபரும் அரசியல் செய்யக் கூடாது. இந்துக்களுக்கு எதிராக சில கட்சிகள் கருத்து பேசி வருகிறார்கள். இந்துக்களுக்கு எதிராக பேசினால் தான் சிறுபான்மையினர் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நிறைய கட்சிகள் தவறான எண்ணத்தில் செயல்படுகிறார்கள். எனவே சில கட்சிகள் அவ்வாறு செய்வதால் இந்துக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளார்கள். அது இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

வருகின்ற 2026 இல் வெற்றிபெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். திமுக மக்கள் விரோத ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல், வன்கொடுமை குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது. திமுக ஆட்சியின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளார்கள். தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த ஆட்சிகளில் மோசமான ஆட்சியாக திமுக ஆட்சி விளங்குகிறது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.