மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நலனைக் காத்திட, போதிய சந்தை தேவையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சுமார் 1.46 லட்சம் ஹெக்டரில் மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு, ஏறத்தாழ 9.49 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நடப்பாண்டு மா மகசூல் அதிகரித்துள்ளதால், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் விலையைக் குறைத்துள்ளன. இதனால், மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5-க்கும் குறைவான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள், மாம்பழங்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். சிலர் மரத்திலேயே பழுக்க விட்டுவிடுகின்றனர்.

மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் தனியாரால் நடத்தப்படுவதாலும், தென் மாநிலங்களில் மாம்பழக்கூழ் அதிக அளவில் கிடைப்பதாலும், விவசாயிகள் நியாயமான விலையைப் பெற முடியவில்லை.

அதனால், வழக்கமாக தமிழகத்தில் இருந்து மாம்பழங்களை கொள்முதல் செய்யும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில வணிகர்களும், தமிழகத்தில் மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதை தவிர்த்துள்ளனர். இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாங்கனி விலையில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தைப் போக்கிட, அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது மிகவும் அவசியம். எனவே மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தற்போதுள்ள மாங்கனி விற்பனை விலைக்கும், சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு, விவசாயிகளுக்கு நேரடி இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் குறைந்தபட்ச சாகுபடி செலவை மீட்பதை உறுதிசெய்யும் வகையில், நியாயமான விலையில் கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மத்திய கொள்முதல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மாம்பழச் சாற்றில் உள்ள பழக்கூழின் உள்ளடக்கம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், குறைந்தபட்ச அளவு மாம்பழக் கூழ் இருக்க வேண்டும் என்று மாம்பழச்சாறு பான தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. எனவே, பானங்களில் பழக்கூழைக் கலப்பதில் மாம்பழச்சாறு பான தயாரிப்பு நிறுவனங்கள் தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், பொருத்தமான வழிமுறைகளை வெளியிட வேண்டும்.

அதேபோல, மாம்பழக்கூழுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக உள்ளதால், நிறுவனங்கள் அதிக அளவில் மாம்பழக்கூழ் தயாரிப்பதில் ஆர்வமில்லாமல் உள்ளன. எனவே, மாம்பழக்கூழுக்கான வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் தற்போதைய துயரச் சூழ்நிலையைச் சமாளிக்கும்படியாக மட்டுமல்லாமல், நமது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான நிரந்தர ஏற்பாடாகவும் இருக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, மாம்பழம் உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கும், முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இவ்விரு கடிதங்களையும் தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று (ஜூன் 25) டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து வழங்கவுள்ளார். திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, எம்எல்ஏ-க்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோரும் உடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.