41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி செல்லும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: பால்கன்-9 ராக்கெட் மூலம் 4 பேர் குழு பயணம்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) நேற்று புறப்பட்டு சென்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது.

இதற்கு இஸ்ரோ சார்பில் செல்ல ககன்யான் திட்டத்துக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை பைலட்களில் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர். கடந்த 1985-ம் ஆண்டு பிறந்த இவர், 2006-ல் இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்ந்தார். 2019-ம் ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு இவர் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்.

சுபான்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்) , போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் விண்வெளி மையம் புறப்பட்டனர். இவர்கள் சென்ற ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்ட டிராகன் விண்கலம், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று மதியம் 12.01 மணிக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையத்தை இன்று மாலை 4.30 மணிக்கு சென்றடையும். இவர்களது பயணம் இந்த மாதத்தில் மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு போன்ற காரணங்களால் 3 முறை ஒத்திபோடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி பயணத்துக்குமுன் சுபான்ஷு சுக்லா அளித்த பேட்டியில், ‘‘ நான் விண்வெளிக்கு ஆய்வு உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை கொண்டு செல்கிறேன்’’ என்றார்.

60 ஆய்வுகள்: சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்தக் குழுவினர், இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 2 வாரம் காலம் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் ஆய்வுகளை முடித்துவிட்டு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்.

41 ஆண்டுகளுக்குப்பின்: விண்வெளி பயணம் மேற்காண்ட முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்தியர் சுபான்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராகேஷ் சர்மாவின் நினைவாக ஒரு பொருளையும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்கிறார். அதை விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பியபின் தெரிவிப்பதாக சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.

அல்வா, மாம்பழ ஜூஸ்: சர்வதேச விண்வெளி மையம் செல்லும் வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை, விண்வெளிச் சூழலுக்கேற்ப சிறப்பாக தயாரித்து எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்திய இனிப்பு வகைகளை எடுத்துச் செல்கிறார். கேரட் அல்வா , பாசி பருப்பு அல்வா, மாம்பழச் சாறு ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.

லக்னோவில் கொண்டாட்டம்: சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றுள்ள சுபான்ஷூ சுக்லாவின் சொந்த ஊர் உ.பி. லக்னோ. இதனால் அங்கு அவருக்கு போஸ்டர்கள் ஒட்டி லக்னோ மக்கள் கொண்டாடினர்.

பிரதமர் மோடி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் குரூப் கேப்டன் சுக்லா. அவர் தன்னுடன் 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களையும் கொண்டு செல்கிறார். அவருக்கும், மற்ற விண்வெளி வீரர்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள்! இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அருமையான பயணம்: ஃபல்கான் 9 ராக்கெட்டை விட்டு கிரேஸ் விண்கலம் பிரிந்து விண்வெளியில் பயணத்தை தொடங்கியவுடன், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: என்ன அருமையான பயணம்! வணக்கம் என் அன்பான நாட்டு மக்களே. விண்கல பயணம் எவ்வளவு அருமையாக இருக்கிறது. 40 ஆண்டு கழித்து நாம் விண்வெளிக்கு திரும்பியுள்ளோம். இது மிகவும் அருமையான பயணம். தற்போது வினாடிக்கு 7.5 கி.மீ வேகத்தில் நாங்கள் புவி வட்டபாதையை சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

எனது தோளில் தேசியக் கொடி உள்ளது. இது நான் தனிநபர் அல்ல, நான் இந்திய மக்களுடன் இருக்கிறேன் என்பதை கூறுகிறது. இது சர்வதேச விண்வெளிமையத்துக்கு எனது பயணத்தின் தொடக்கம் அல்ல. இந்தியாவின் விண்வெளி பயணதிட்டத்துக்கான தொடக்கம். இந்த பயணத்தில் இந்தியர்கள் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதை நாம் பெருமையாக கருதி, இந்தியா விண்ணுக்கு வீரர்களை அனுப்பும் பயணத்தை நாம் தொடங்குவோம். ஜெய்ஹிந்த், ஜெய் பாரத். இவ்வாறு அவர் கூறினார்.

கண் கலங்கினார் சுபான்ஷு சுக்லாவின் தாய்: சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களுடன் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபல்கான் 9 ராக்கெட் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து நேற்று மாலை தீப்பிளம்புடன் புறப்பட்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதை நாசாவின் தரைகட்டுப்பாட்டு மையத்தின் பிரம்மாண்ட திரையில் சுபான்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ராக்கெட் விண்ணில் சீறிப் பாயந்ததும், சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா கைகூப்பியபடி பிரார்த்தனை செய்தார். அவர் கண்களில் ததும்பிய கண்ணீரை அவர் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். சுபான்ஷு சுக்லாவின் தந்தை சாம்பு தயாள் சுக்லாவும் இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட். மகனின் விண்வெளிப் பயணத்தை அவர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.