பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதையடுத்து நேற்று கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டது.
திருமகூடலு சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து தமிழகம் நோக்கி காவிரியில் பாய்ந்தோடி வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி நீர் தமிழகம் நோக்கி வந்தது. இதனால் நஞ்சன்கூடு, டி.நரசிப்புரா, கொள்ளேகால் பகுதிகளிலும் காவிரி கரையோர கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கப்பட்டணா, ஹலகூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 60,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.