எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

கிங்டாவோ: எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது, சுகோய்-30 ரக போர் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

சீனாவின் கிங்டாவோ நகரில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், தற்போதைய புவிசார் அரசியல் சூழல்கள், எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்திய – ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியாவுடன் வலுவான நட்புறவை ரஷ்யா கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஆண்ட்ரி பெலோசோ, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று குறிப்பிட்டார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அதன் காரணமாக பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குதல், சுகோய்-30 ரக போர் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்களை குறித்த காலத்திற்குள் கொள்முதல் செய்தல் போன்ற அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெலாரஸ், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்புப் பேசினார். பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் விக்டர் க்ரெனின், தஜிகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் சோப்ரிஸோடா எமோமாலி அப்துராகிம் மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் டௌரன் கோசனோவ் ஆகியோருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்கள், பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவை எட்டி இருப்பது குறித்து எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்தும் விளக்கமளித்தார்.

திறன் மேம்பாடு, பயிற்சி, ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ராணுவக் கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு வழங்க இந்த சந்திப்பின் போது ஒப்புக் கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.