இந்திய அணி இந்த 3 விஷயங்களை செய்தாலே 'வெற்றி' உறுதி… செய்யுமா கில் படை?

India vs England: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson – Tendulkar Trophy) மீது கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது எனலாம். டெஸ்டில் அதிரடி பாணியை கையில் எடுத்திருக்கும் இங்கிலாந்து அணியுடன், இளமையான மற்றும் திறமையான இந்திய அணி மோதும் இந்த டெஸ்ட் தொடர்தான் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இந்த சுவாரஸ்யமான தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி (Team England) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும் சுப்மான் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி (Team India) முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தையே விளையாடியிருந்தது. ஆனால் அனுபவமின்மை, அழுத்தம் காரணமாக சிறு சிறு தவறுகளை செய்து, அவை தோல்வியை பரிசாக அளித்துவிட்டன. 

India vs England: இந்த 3 விஷயங்கள் முக்கியம்

எனவே, அடுத்த நடைபெறும் 4 போட்டிகளிலும் முதல் போட்டியை செய்யக்கூடாது என்பதே இந்திய அணியின் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், 2வது டெஸ்ட் போட்டியில் இந்த மூன்று விஷயங்களை சரியாக செய்தாலே இந்திய அணிக்கு வெற்றி வசப்படும் என கூறியுள்ளார். அவர் தெரிவித்த மூன்று விஷயங்களை இங்கு காணலாம். 

India vs England: முதலில் பேட்டிங் செய்தால் இதை செய்யுங்க

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பேசியதாவது, “உங்களுக்கு முதல் மற்றும் 3வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, எதிரணியிடம் இருந்து போட்டியை எடுத்துவிட வேண்டும். முதல் போட்டியில் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு இரண்டு இன்னிங்ஸ்களிலும் கிடைத்தது. ஆனால், அதை சிறப்பாகச் செய்யாத நிலையில்தான், இங்கிலாந்து ஈஸியாக இலக்கை அடித்துவிட்டனர்” என்றார். 

India vs England: இரண்டாவது போட்டியில் இவரை சேருங்க!

வரும் ஜூலை 2ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறுகையில், “குல்தீப் யாதவை (Kuldeep Yadav) அணிக்குள் கொண்டுவருவது எப்படி? என்பதை யோசிக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் இருந்து நாம் பார்த்த அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பல தருணங்களில் சிறப்பாகச் செயல்படவில்லை” என்றார்.

India vs England: வேகப்பந்துவீச்சு படை முக்கியம்

இந்தியாவின் வேகப்பந்துவீச்சு படை குறித்து பேசிய அவர், “மூன்றாவதாக பார்த்தோமானால், வேகப்பந்துவீச்சு தாக்குதல் எவ்வாறு அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்பதை கவனிக்க வேண்டும். முதல் டெஸ்டில் பல பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஒரு முனையிலிருந்து சிறப்பாக பந்து வீசிய பும்ராவுக்கும், இது கேப்டனுக்கும் (கில்) போதுமான ஆதரவு கிடைக்கவில்லை” என்றார். இந்த மூன்று விஷயத்தையும் சரியாக செய்தாலே இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்கிறார் சஞ்சய் பாங்கர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.