நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: அபுஜ்மாத்தில் உள்ள கோகமெட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து புதன்கிழமை மாலை நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
மாவோயிஸ்ட்களின் மாட் பிரிவின் மூத்த போராளிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பெண் நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.