பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாந்தா (வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவது மனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் நாகராஜின் மூத்த மகள் ஹேமாவுக்கும், அவருடைய தங்கை மகன் கணேசுக்கும் (25) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்லலாம் என கூறி ஹேமாவை கணேஷ் அழைத்து சென்றார். சென்னகிரி பஸ் நிலையத்தில் அவரை இறக்கிவிட்டு கடைக்கு சென்று வருவதாக கூறிய கணேஷ், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.
இதனால் ஹேமா, வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் வளர்ப்பு தாய் சாந்தாவும் மாயமாகி இருந்தார். அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணமும் மாயமாகி இருந்தது. இந்தநிலையில், கணவர் கணேசும், தனது வளர்ப்பு தாய் சாந்தாவும் நகை-பணத்துடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அதிர்ச்சி தகவல் ஹேமாவுக்கு தெரியவந்தது.
இதுபற்றி ஹேமா, தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ், மனைவி சாந்தாவையும், மருமகன் கணேசையும் பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே மருமகனுடன் மாமியார் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. நாகராஜ், சென்னகிரி போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியும், மருமகனும் வீட்டை விட்டு ஓடியது பற்றி புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கணேசுக்கும், சாந்தாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. வளர்ப்பு மகள் ஹேமாவை, கணேசுக்கு திருமணம் செய்து வைத்தால் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறு இருக்காது என்று சாந்தா கருதினார். அதன்படி கணவரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்துக்கு பிறகு சாந்தாவும், கணேசும் எந்த இடையூறுமின்றி கள்ளக்காதலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். தன்னை விட வளர்ப்பு தாயிடம் கணேஷ் நெருங்கி பழகி வந்ததால் ஹேமாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அவர் கணேசின் செல்போனை தற்செயலாக பார்த்துள்ளார். அப்போது அதில் தனது வளர்ப்பு தாயும், கணவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவையும், ஆபாசமாக இருக்கும் படங்களையும் பார்த்து அதிர்ந்து போனார். இதுபற்றி கணேசிடம் கேட்டு ஹேமா தகராறு செய்துள்ளார்.
தங்கள் குட்டு அம்பலமானதால் நெருங்கி பழக முடியாது என கருதிய கள்ளக்காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார், மருமகன் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். திருமணமான 2 மாதத்தில் கணவர், தனது வளர்ப்புத்தாயுடன் ஓடியதால் புதுப்பெண் கண்ணீர்விட்டு அழுதபடி பரிதவித்து வருகிறார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.