சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும் முயற்சியாகும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வலியறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக சார்பில் தேர்தலுக்கான பல முன்னெடுப்புகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இப்பணிகள் அடுத்த 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. வீடுவீடாக வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சென்று, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பார்வையாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காணொலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதுடன், அரசின் திட்டங்கள் தொடர்பாக வீடுவீடாக சென்று எடுத்துரைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியாகும்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள், திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையம் நாம், சென்றடைய வேண்டும். தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது. இந்தியைத் திணிக்கின்றனர். கல்வி நிதி மறுக்கப்படுகிறது. நீட் மூலம் மாணவர்கள் பலிவாங்கப்படுகின்றனர். தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றத்தில் நம் வலிமையை குறைக்க சதி நடக்கிறது. பண்பாடு பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகின்றனர்.
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன். நம்மை அடக்க நினைத்தால் நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இதுதான் தமிழர்களின் தனிக்குணம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்.
இந்த செய்தியை தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம். அதற்காக ஜூலை 1 தொடங்கி 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்.
ஜூலை 1-ம் தேதி நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன். ஜூலை 2ம் தேதி கட்சி ரீதியான 76 மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். மறுநாள் வீடுவீடாக மக்களை நேரில் சந்திக்க வேண்டும். இறுதியாக ஆகஸ்ட் 17ம் தேதிக்குப்பின் ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்களை நடத்த வேண்டும்” என்று முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, இத்திட்டத்துக்கான நான்கு படிநிலைகளான பயிற்சி, தொடக்கம், இல்லந்தோறும் மக்கள் சந்திப்பு, திட்டம் நிறைவு ஆகியவை குறித்து முதல்வர் விளக்கினார். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான அறிவுறுத்தல்களையும் முதல்வர் வழங்கினார்.
நிர்வாகிகளுடன் சந்திப்பு – நேற்று காலை ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கப்பட்ட, சட்டப்பேரவை தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பில், அந்தியூர், மேட்டுப்பாளையம், மொடக்குறிச்சி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். இதில், குறிப்பாக, தொகுதியில் தற்போதைய நிலவரம்,வெற்றி வாய்ப்பு, அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் செயல்பாடுகளை கேட்டறிந்தார். தற்போது வரை 21 தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்துள்ள முதல்வர், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 54 தொகுதி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.