கொல்கத்தா: `அப்பெண் அங்கு செல்லாமல் இருந்தால் நடந்திருக்காது' – TMC MLA பேச்சு; வலுக்கும் எதிர்ப்பு

கொல்கத்தாவில் கடந்த புதன்கிழமை மாலை, சட்டக் கல்லூரி மாணவியொருவர் கல்லூரி வளாகத்திலேயே முன்னாள் மாணவர் உள்பட மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் அதை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு, நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியிருக்கின்றனர்.

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை - கைதானவர்கள்
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை – கைதானவர்கள்

இருப்பினும், சட்டக் கல்லூரி மாணவியான அப்பெண் துணிச்சலாக போலீஸில் புகாரளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் அகமத், பிரமித் முகோபாத்யா ஆகிய மூவரை போலீஸார் கைதுசெய்தனர்.

இவர்களில், தற்போது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் மனோஜித் மிஸ்ரா மாநில ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் மாணவர்கள்.

இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மதன் மித்ரா, பாதிக்கப்பட்ட்ட பெண்ணையே குற்றசம்சாட்டும் வகையில் பேசியிருப்பது நிலைமையைத் தீவிரமாக்கியிருக்கிறது.

கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து நேற்று பேசிய மதன் மித்ரா, “அந்தப் பெண் அங்கு சென்றிருக்காவிட்டால் இச்சம்பவம் நடந்திருக்காது.

எங்கு செல்கிறேன் என்று அவர் யாரிடமாவது கூறிவிட்டு இரண்டு பேரை உடன் அழைத்துச் சென்றிருந்தால் இது நடந்திருக்காது.

குற்றம் செய்தவர்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டனர்.” என்று கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா

அதேபோல், ஆளுங்கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, “இது மாணவர்களால் மாணவிக்கு நேர்ந்தது.

எனவே அவரை யார் பாதுகாப்பார்கள்? இந்தப் பாலியல் வன்கொடுமைகள் அனைத்தையும் சில ஆண்கள் செய்கிறார்கள்.

இத்தகைய ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் போராட வேண்டும்.

ஆண்களின் மனநிலை இப்படியே இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்.” என்றார்.

ஆளுங்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளான மதன் மித்ரா, கல்யாண் பானர்ஜி ஆகியோரின் இத்தகைய பேச்சுகளுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அது அவ்விருவரின் தனிப்பட்ட கருத்து. அவர்களின் கருத்து கட்சி நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை.

கட்சி இதை வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை நாங்கள் கோருகிறோம்.” என்று தெரிவித்தது.

திரிணாமுல் காங்கிரஸ்

இவையானதுக்கும் பின்னர் மதன் மித்ரா, “குற்றவாளிகளை எந்த வகையிலும் நான் பாதுகாக்க முயற்சிக்கவில்லை.

எனது கருத்து முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் ஒரு தரப்பு தனது சொந்த லாபத்துக்காக எனது கருத்தை தவறாக சித்தரித்திருக்கிறது.” என்று ட்வீட் செய்தார்.

கல்யாண் பானர்ஜி
கல்யாண் பானர்ஜி

மேலும் கல்யாண் பானர்ஜி, “கட்சியின் அறிக்கைகையை நான் முற்றிலும் மறுக்கிறேன்.

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தலைவர்களை அவர்கள் மறைமுகமாகப் பாதுகாக்கிறார்களா?

இதற்கு நேரடியாகப் பொறுப்பேற்றுள்ள தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்தவொரு அறிக்கையும் மாற்றத்தைக் கொண்டுவராது.

இதில் இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், 2011-க்குப் பிறகு தோன்றிய சில தலைவர்களும் இதுபோன்ற குற்றங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

அதேபோல் என் கருத்துக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை உண்மையிலேயே புரிந்துகொள்ள அறிவு தேவை. துரதிர்ஷ்டவசமாக அது இல்லை.” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.