சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வரும் ஒரு செய்தி என்றால் அது சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வர உள்ளார் என்பது தான். ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடைசி இரண்டு இடங்களை பிடித்தன. தோனி விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி ஒரு விக்கெட் கீப்பர் பேட்டரை தேடியது. ஆனாலும் அவர்களுக்கு சரியான ஆப்ஷன் கிடைக்கவில்லை. இந்நிலையில் சஞ்சு சாம்சனை தங்கள் அணியில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் படிங்க: Ind vs Eng: இந்திய அணியில் இருந்து இந்த 2 வீரர்கள் நீக்கம்.. நுழையும் வேகப்பந்து வீச்சாளர்கள்!
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கிரிக்கெட் அனாலிடிஸ்ட் பீடாக்(Pdoogg), சென்னை அணியில் உள்ள அஸ்வின் மற்றும் சிவம் துபே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல உள்ளனர் என்றும், அதற்கு பதிலாக சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வர உள்ளார் என்றும் தெரிவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் சமீபத்தில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியை நேரில் சென்று பார்த்து இருந்தார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் தொடர்புடைய டெக்ஸாக் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இவை அனைத்தையும் ரசிகர்கள் தொடர்புபடுத்தி சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உண்மைதான் என்று நம்பத் தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே இந்த வீரர்கள் மாற்று நடைபெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21.75 கோடி மதிப்புள்ள வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தருகிறது. அதே சமயம் 18 கோடி மதிப்புள்ள சஞ்சு சம்சனை சிஎஸ்கே வாங்குகிறது. இதன் மூலம் மீதமுள்ள 3.75 கோடியை ராஜஸ்தான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தரவேண்டும். இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு ஒரு சரியான வீரராக இருப்பார். காரணம் விக்கெட் கீப்பர், ஓப்பனிங் பேட்ஸ்மேன், கேப்டன் என அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருப்பார். அதேசமயம் சென்னை அணியில் உள்ள சிவம் தூபேவை விட்டுக் கொடுப்பது பெரிய பாதிப்பாக அமையலாம்.
2022 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே 2023ல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அடித்து ஆடுவதில் சிவம் துபே பெயர் பெற்றிருந்தார். சென்னை அணிக்கு பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்தார் துபே. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அணியிலும் சிவம் துபே இடம் பெற்றார். இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிவம் துபே அவ்வளவாக ரன்கள் அடிக்க வில்லை. இந்நிலையில் அவரையும், அஸ்வினையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்க சிஎஸ்கே சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: இங்கிலாந்தை வீழ்த்த கில்லுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு இந்த பிளேயர் தான் – ரஹானே