திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய ஏழு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று TNPL வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது அணியாக மாறியுள்ளது.
இதற்கு முன் 2017 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏழு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும்.

முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது. முதலில் களமிறங்கிய அரவிந்த் டக் அவுட் ஆக சீதாராம் 4 ரன்கள் எடுத்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டனான என்.எஸ்.சதுர்வேத் பொறுப்புடன் விளையாடி 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடன் கைகோர்த்து நின்று அதிரடி காட்டிய அத்திக் உர் ரகுமான் 28 பந்துகளில் 41 ரன்கள்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
அடுத்து வந்த சரத்குமார் ஒரு ரன்னில் அவுட்டாக , முருகன் அஸ்வின் 38 ரன்கள் (34 பந்துகளில்) , சரவணன் 20 ரன்கள்(15 பந்துகளில்) குர்ஜப்னீத் சிங் 15 ரன்கள் ஆகியோரின் ஆட்டத்தால் மதுரை பேந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது. இந்த முறைப்படி 13 ஓவர்களில் 114 ரன்கள் எடுக்க வேண்டும். சேப்பாக் கில்லீ ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.
இதனால் 12.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை தொட்டு அபார வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு விஜய் ஷங்கர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் (17 பந்துகள்), ஆஷிக் கலீல் ரகுமான் 22 ரன்களும், பாபா அபராஜித் 20 ரன்களும் (12 பந்துகள்) எடுத்து கைகொடுத்தனர்.

மதுரை பேந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆயுஷ் எம். 2 விக்கெட்டுகளையும், சூர்யா ஆனந்த் மற்றும் முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட விஜய் ஷங்கர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பேசிய விஜய் ஷங்கர் “பிளே ஆஃப்களுக்குச் செல்வதற்கு முன் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். நாங்கள் விளையாடி ஏழு லீக் போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்லும் முனைப்புடன் உள்ளோம்” என்றார்.
ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் வெற்றி களிப்பில் சேப்பாக் கில்லீஸ் வலம் வர மதுரை பேந்தர்ஸ் அணியின் சோகம் தொடர்கிறது.