கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரிஷப் பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது.இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், சுமார் 635 நாட்களுக்கு பிறகு முழுமையாக குணமடைந்தார்.
தற்போது ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சதம் அடித்து அசத்தி வருகிறார். சம்ர்சால்ட் அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது, அவருக்கு சிகிச்சை அளித்த எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் தின்ஷா படிவாலா பேசி உள்ளார். அவர் விபத்துக்கு பிறகு, மீண்டும் என்னால் விளையாட முடியுமா என்ற கேள்வி கேட்டதாக கூறி உள்ளார்.
ரிஷப் பண்ட் ஒரு பெரிய அதிர்ஷ்டசாலி. அவர் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ரிஷப் பண்ட்டுக்கு வலது முழங்காலில் இடப்பெயர்ச்சின் ஏற்பட்டிருந்தது. அவரது வலது கணுக்காலிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், பல சிறிய காயங்கள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தின் பின்புறம் முதல் முழங்கால் வரை அவரது தோல் முற்றிலுமாக சேதமடைந்து இருந்தது. காரில் உடைந்த கண்ணாடி அவரது முதுகை சேதப்படுத்தி இருந்தது.
உண்மையில் கார் கவிழ்ந்து வெடித்து சிதறும் இதுபோன்ற விபத்துகளில், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகம். இதுபோன்ற விபத்தில் நரம்பு அல்லது இரத்த நாளம் காயமடைய அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் ரிஷப் பண்ட்டின் இரத்த நாளம் அதிர்ஷ்டவசமாக காயம் அடையவில்லை. அவர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த உடன் கேட்ட முதல் கேள்வி, என்னால் மீண்டும் விளையாட முடியுமா என்று தான். ஆனால் அவரது தாயார் கேட்டது. அவரால் மீண்டும் நடக்க முடியுமா? என்று கேட்டார் என மருத்துவர் தின்ஷா படிவாலா கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த விபத்திற்குப் பிறகும், முன்பை விட அதிக உத்வேகத்துடன் ஒரு கிரிக்கெட் வீரராகத் திகழ்கிறார். அவர் இப்போது வாழ்க்கையை தத்துவ ரீதியாக அணுகுகிறார். தன்னை சுற்றி நடப்பவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறார். மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அனைவருக்கும் இதுபோன்றுதான் நடக்கும். அவர்கள் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பார்கள்.
ரிஷப் பண்ட் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர். பார்ப்பதற்கு சற்று பருமனாகத் தெரிந்தாலும், அவரது உடல் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால்தான் அவரால் ‘சம்ர்சால்ட்’ அடிக்க முடிகிறது. அவர் அதற்கு நன்கு பயிற்சி பெற்று, அதை மிகவும் சரியாகவும் செய்கிறார். ஆனால், அதை இப்போது செய்வதற்கான அவசியம் இல்லை என கூறினார்.
மேலும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய ஆர்சிபி பிளேயர், எப்ஐஆர் பதிவு – முழு விவரம்
மேலும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?