புதுடெல்லி: அரசின் நலத் திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நீண்ட காலத்துக்கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜூலை 3-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்க இருக்கிறது, ஒடிசா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுகிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடு இன்றி லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரைகளில் பங்கேற்கின்றனர். இதன்மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு மேலோங்குகிறது.
2 புதிய சாதனைகள்: நமது நாட்டின் 2 புதிய சாதனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கண்களை பாதிக்கும் ட்ராகோமா நோய் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும். அனைத்து ஊரக பகுதி வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது.
இதனால் ட்ராகோமா உட்பட பாக்டீரியாவால் பரவும் நோய்களின் அபாயம் குறைந்துவருகிறது. இந்தியாவில் நோய்களுக்கான அடிப்படை காரணிகள் கண்டறியப்பட்டு, அந்த நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டு வருகின்றன என்று உலக சுகாதார அமைப்பே புகழாரம் சூட்டி உள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில், இந்தியா முழுவதும் 64 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு சமூக பாதுகாப்பு ஆதாயம் கிடைத்து வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது, சுமார் 95 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரசு நலத் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25 கோடிக்கும் குறைவாகவே இருந்தது.
அவசரநிலை ஓர் இருண்ட காலம்: கடந்த 1975-ம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த அவசர நிலையை அமல் செய்தவர்கள், நமது அரசியலமைப்பு சட்டத்தை படுகொலை செய்தனர். அதோடு நீதிமன்றங்களை தங்களின் அடிமைகளாக மாற்ற முயற்சி செய்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் கொடூரமான சித்ரவதைகளுக்கு ஆளாகினர். அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தின்படி யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது.
அவசர நிலையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டனர். அது ஓர் இருண்ட காலம். ஆனால், அடக்குமுறைக்கு மக்கள் பணியவில்லை. அதை எதிர்த்து போராடி மாபெரும் வெற்றி பெற்றனர். அவசர நிலை திணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதை நினைவு கூரும் வகையில் கடந்த 25-ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினத்தை கடைபிடித்தோம்.
உடல் உறுதி,ஆரோக்கிய வாழ்வில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உடல் பருமனை குறைக்க வேண்டும். அன்றாட உணவில் 10 சதவீதம் வரை எண்ணெய்யை குறைத்தால் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினோம். இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க தனிநபர்கள் முதல் பல்வேறு குழுக்கள் அதிதீவிரமாக பணியாற்றி வருகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க அம்மாவின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. உங்கள் கிராமங்கள், நகரங்களில் அதிக அளவில் மரங்களை நட வேண்டுகிறேன். இதன்மூலம் நமது வருங்கால தலைமுறையினரை பாதுகாக்க முடியும்.
இப்போது அனைவரின் பார்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது நிலைபெற்றிருக்கிறது. நமது குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா, விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கிறார். அவரோடு நான் கலந்துரையாடினேன். எங்கள் உரையாடலை நீங்களும் கேட்டிருப்பீர்கள். அடுத்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ஷுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து விரிவாக பேசுவேன்.
ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள், ஆடிட்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இரு பிரிவினரும் நமது சமூகத்தின் மிகப்பெரிய தூண்கள். மருத்துவர்கள் நமது உடல் ஆரோக்கியத்தின் பாதுகாவலர்கள். ஆடிட்டர்கள் நமது பொருளாதாரத்தின் வழிகாட்டிகள். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.