லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இடம் பிடித்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் – ஜாக் கிராலி களமிறங்கினர். வழக்கமாக அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணி இந்த முறை பொறுமையாக விளையாடியது. நிதானமாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது.
இந்த இன்னிங்சின் 14 ஓவரை வீசிய நிதிஷ் ரெட்டி அந்த ஓவரின் 3-வது பந்தில் பென் டக்கெட்டின் (23 ரன்கள்) விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த ஆலி போப் 2 பந்துகளில் எதிர்கொண்ட நிலையில் ஒரு ரன் அடிக்க, கடைசி பந்தை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலி (18 ரன்கள்) எதிர்கொண்டார். அந்த பந்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டையும் நிதிஷ் ரெட்டி கைப்பற்றி அசத்தினார். இரண்டு பேரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
தற்போது ஆலி போப் – ஜோ ரூட் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.