மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் பாய்ந்து விழுந்து பந்தை பிடிக்க முயற்சித்தபோது, இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த ஆட்டம் முழுவதும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார். ஆனால் பண்ட் பேட்டிங் மட்டும் செய்தார். மான்செஸ்டரில் நாளை தொடங்கும் 4-வது டெஸ்டிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்தான் என கூறப்பட்டது . இதனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேப்டன் சுப்மன் கில் கூறியதவாது,
ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வார். மேலும் ஆகாஷ் தீப் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார் . அன்சுல் காம்போஜ் இந்த போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அவருடைய திறமையை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் எங்களுக்குப் போட்டிகளை வெற்றி பெறச் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என தெரிவித்தார்.