ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன . இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் கான்வே 19 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 3, மார்க் சேப்மன் 10 என்ற அவுட் ஆகினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.