டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல்

வாஷிங்டன்,

இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு எதிராக இந்த வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்தார். இதனால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷியா-சீனாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்ததால், அமெரிக்கா பணிந்தது.

இந்தியா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வந்த டிரம்ப், தனது முடிவை மாற்றிக்கொண்டார். “மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்” என்று கூறினார். மேலும் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனால் இந்தியா-அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.இந்த நிலையில் மோடி-டிரம்ப் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

“அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் வரும் நாட்களில் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்தியா மீது டிரம்ப் சில அதிருப்திகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நேர்மறையான பாதையில் செல்கின்றன. இரு தலைவர்களும் சந்திப்பதை நீங்கள் நிச்சயமாகப் பார்ப்பீர்கள். அவர்கள் மிகவும் நேர்மறையான கருத்தை கொண்டுள்ளனர். இரு தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பைப் பேணுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்.குவாட் உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.”இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.