துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. இதன்படி செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயை சேர்ந்த பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாதத்தில் அபிஷேக் ஷர்மா டி20 போட்டியில் ஆடி 3 அரைசதம் உள்பட 314 ரன்கள் சேர்த்ததுடன் ஆசிய கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிறந்த வீராங்கனைக்கான இறுதிப்பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, பாகிஸ்தானின் சித்ரா அமின், தென்ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு பிரிவிலும் அதிக வாக்குகள் அடிப்படையில் தலா ஒருவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.