டெல்லியில் ஆப்கானிஸ்தான் மந்திரியின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு

டெல்லி,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து, அந்நாட்டின் தலைநகர் காபுலில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை இந்தியா மூடியது. அதேவேளை, அந்நாட்டிற்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் 16ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அமீர்கான் முத்தாகி நேற்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அதன்பின்னர், அமீர்கான் முத்தாகி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகியின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்தியாவின் பல்வேறு செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் பங்கேற்றனர். ஆனால், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் நிருபர் கூட பங்கேற்கவில்லை. பெண் நிருபர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தலிபான்கள் அரசு மேற்கொண்டு வரும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற தலிபான் மந்திரியின் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.