பாரிஸ்,
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். இந்நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான அரசின் ஆட்சி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே, அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட 4 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மேக்ரான் தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேவேளை, அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீண்டும் கொண்டுவரவும் தனது ஆதரவாளரான ஜெபஸ்டின் லெகோர்னுவை பிரதமராக மெக்ரான் அறிவித்தார். அவர் கடந்த செப்டம்பர் 9ம் தேதி பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் குழப்பம் காரணமாக பதவியேற்ற 27 நாட்களில் ஜெபஸ்டின் லெகோர்னு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பிரான்சின் பிரதமராக ஜெபஸ்டின் ஜெபஸ்டின் லெகோர்னு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மந்திரி சபையை நியமித்து, நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறும் புதிய பிரதமர் ஜெபஸ்டினிடம் ஜனாதிபதி மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.