தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் – முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்களின் வீடுகளில் புகுந்தது. கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தேனியில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் ஓடியதோடு வீடுகளுக்குள்ளும் புகுந்தது. பேரிடர் மீட்புக் குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு அங்கிருக்கும் மக்களை மீட்டனர். உத்தமபாளையம் தாலுகா தேவாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் கன மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓடையில் வரும் வெள்ளநீர் ஓடை தூர்வாரப்படததால் விவசாய நிலத்திற்குள் சென்று குளம்போல் காட்சி அளித்தது. தேவாரம் பகுதியில் உள்ள தங்கத்துரை என்பவரது தோட்டத்தில் இருந்த கோழிப் பண்ணையில் வெள்ளநீர் புகுந்ததால் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பத்தாயிரம் கோழிகள் அனைத்தும் இறந்து தண்ணீரில் மிதந்தன.

வெள்ளத்தால் இறந்து போன கோழிகள்.

இதனால் கோழிப்பண்ணை நடத்துவரும் கதிரேசன் என்பவர் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்துவிட்டதாகவும் தேனி மாவட்ட நிர்வாகம் தனது வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.கூடலூர் தாமரைகுளம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் வெள்ளநீரில் மூழ்கின. நுனிக்கரைக்குச் ரோட்டில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் விளை நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தேனியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை மக்கள் அதிர்ச்சியோடு பார்த்து சென்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.