"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" – ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.

அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே அவரது குடும்பம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தாவாலா மிட்டாய் கடையில்தான் இனிப்புகள் வாங்குவது வழக்கம். அதனால் ராகுல் காந்தி சந்தாவாலா மிட்டாய் கடையில் இருந்தவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசினார்.

இனிப்புகள் செய்யும் இடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி சில நிமிடங்கள் ஜாங்கிரி செய்தார். அதன் பிறகு லட்டு உருட்டினார்.

கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கடையின் பாரம்பர்யம் குறித்து ராகுல் காந்திக்கு எடுத்துக் கூறினார். அதோடு ராகுல் காந்தி குடும்பத்தினர் இதற்கு முன்பு இக்கடைக்கு வந்தபோது எடுத்திருந்த புகைப்படங்களையும் காட்டினார்.

கடைக்காரர்களுடன் ராகுல் காந்தி
கடைக்காரர்களுடன் ராகுல் காந்தி

இச்சந்திப்பைத் தொடர்ந்து சுஷாந்த் ஜெயின் அளித்த பேட்டியில், ”ராகுல் காந்தி திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. எனவே ராகுல் காந்தியிடம் விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம். உங்களது திருமணத்திற்கு எங்களுக்கு இனிப்பு ஆர்டர் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.

அவர் கடைக்கு வந்ததும் தானே இனிப்புகளைச் செய்து சாப்பிட்டு பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடைய அப்பா, மறைந்த ராஜீவ் காந்திக்கு ஜிலேபி மிகவும் பிடிக்கும். அதனால் அதனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னேன். அதனால் அவர் ஜிலேபி செய்தார்.

அவருக்கு லட்டுகள் மிகவும் பிடிக்கும். அதனால் சார், நீங்கள் அதையும் செய்யலாம் என்று சொன்னேன். எனவே அவர் இந்த இரண்டையும் செய்தார்” என்று கடை உரிமையாளர் கூறினார்.

ராகுல் காந்தி கடை உரிமையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதோடு தீபாவளியை எப்படி கொண்டாடுகிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இந்த நிகழ்வுகளை ராகுல் காந்தி தனது எக்ஸ்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.