காவிரியில் நீர் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 60,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு நிலவுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள்து. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்று மாலை 35,500 கன அடியாக இருந்த நிலையில், இன்று மாலை 45,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் இன்று மாலை திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.

அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,300 கன அடியும், 16 கண் மதகு வழியாக 22,700 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை: இது குறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 45,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் விநாடிக்கு 60,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்” என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.