மாரி செல்வராஜ் செய்யும் 'இந்த' விஷயம் சாதாரணமானது அல்ல; எனக்கு ஆச்சரியமாக உள்ளது – பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் ‘பைசன்’. இந்தத் திரைப்படத்தின்‌ வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், “நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன், என்னுடைய வாழ்க்கையைப் படமாக எடுத்து வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால், துணிந்து சினிமாவிற்குள் வந்தேன்.

அப்போது என் படம் குறித்து யாராவது என்னிடம் கேட்டால் நான் சொல்வதை பாசிட்டிவ் ஆக எடுத்துகொள்வார்களா என்கிற பதற்றம் எனக்குள் ஒட்டிக்கொள்ளும்.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

நாங்கள் தவறாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. 75 ஆண்டுகால சினிமா வரலாற்றில் பேசப்படாதது குறித்துப் பேசப்போகிறோம்.

இத்தனை நூற்றாண்டுகள் கடந்துவிட்டது… தீபாவளியின் போது ஒரு ஊருக்குள் புகுந்து என் சகோதரர்களை அடித்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு ஊருக்கு சென்றீர்கள் அல்லவா… அங்கு சாதியால் மக்கள் இரண்டுபட்டிருப்பதை பார்க்கவில்லையா? இதை எப்போது சரி செய்யப்போகிறோம்?

இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கான‌ முயற்சிதான் எங்களது சினிமா. நாங்கள் மக்களிடமிருந்து விலகும் சினிமாவை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்களை நெருங்கதான் சினிமா எடுக்கிறோம். மக்கள் விரும்பும் சினிமாவை எடுக்க முயற்சிக்கிறோம். அவர்களை கற்பிப்பதற்காக படங்களை எடுக்கிறோம். இதில் சில தோல்விகள் வரலாம்.

மாரி செல்வராஜ் தொடர்ந்து வெற்றிப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதில் எனக்கு ஆச்சரியம்… சந்தோஷம். இது சாதாரண விஷயம் கிடையாது.

இப்போது படம் வெளியாவதற்கு முன்பே, இந்தப் படங்களைப் பார்க்காதீர்கள்… இது சாதிப் படம் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

பைசன் வெற்றிவிழா
பைசன் வெற்றிவிழா

இது ஒரு விளையாட்டுப் படம். இதில் ஒருவன் முன்னேற எப்படி சமூக அழுத்தங்களைச் சந்திக்கிறான் என்பது காட்டப்பட்டுள்ளது.

இதை மாரி செல்வராஜ் கவனமாகக் கையாண்டிருக்கிறார். இதன் மூலம் மக்களை பிரித்துவிடக்கூடாது என்று அன்புடனும், கவனமுடனும் செயல்பட்டிருக்கிறான்.

அந்த அன்பு தான் சமத்துவம். அது எப்படி இன்னொரு மனிதனுக்கு எதிரானதாக மாறும்?

மனிதனுக்குள் இருக்கும் பிரச்னையைப் பேசுவது எப்படி வெறுப்பாக மாறும்?

எப்படியாவது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்கிற அன்பு மட்டும் தான் பிரதானம். வெறுப்பை அழிப்பதற்கான முயற்சிதான் இது. ஆனால், வெறுப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.