திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிசபையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 4 மந்திரிகளும் உள்ளனர்.இந்தநிலையில் சமீபத்தில் மந்திரி சபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்காமல் தேசிய கல்விக் கொள்கையான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்தது. இதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் நிலவியது.
இதற்கிடையே மந்திரிசபையை கூட்ட முதல்-மந்திரி பினராயி விஜயன் முடிவு செய்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மந்திரிகள் 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியானது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்ததற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க இந்த முடிவை எடுத்தனர். இந்த பிரச்சினையை தொடர்ந்து தேசிய செயலாளர் எம்.ஏ.பேபியும், மாநில நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பரபரப்பான சூழலில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசுடனான பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் இணைந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்காக மந்திரி சிவன் குட்டி தலைமையில் 7 மந்திரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 மந்திரிகளும் சேர்க்கப்பட்டனர். அதாவது குழுவில் மந்திரிகள் சிவன் குட்டி, ராஜன், ரோஷி அகஸ்டின், பி.ராஜீவ், பிரசாத், கிருஷ்ணன் குட்டி, சசீந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினரின் அறிக்கை வரும் வரை ஒப்பந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நவம்பர் 5-ந் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவும் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்து இருப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.